Thursday, November 3, 2016

-மனுஷ்ய புத்திரன்:

வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன்
நீ ஒரு அரசனாகவோ
அரக்கனாகவோ இரு
ஆட்சேபணையில்லை
நான் ஒரு எளிய மனிதனாக
இருந்துவிட்டு போகிறேன்
என்னை தலை வணங்கவும்
மண்டியிடவும் செய்வதுதான்
உன் நோக்கம் எனில்
அப்படியே செய்வதில்
எனக்கு புகார் ஒன்றுமில்லை
தலைகள் வணங்கவும்
முழங்கால்கள் மண்டியிடவுமே
படைக்கப்படுகின்றன
ஆனால் நீ மண்டியிடச் செய்கிற ஒருவனுக்கு
நீ கடைசியில் ஏதாவது தர வேண்டும்
என்பதுதா உலகத்தின் நியதி
அதுதான் மண்டியிடச் செய்வதற்கான
உன் அதிகாரத்தை நிலை நிறுத்தும்
ஆனால் எனக்கு தேவையான
எதுவும் உன்னிடம் இல்லை
உன்னிடம் ஏராளமான பரிசுகள் இருக்கின்றன
நீ எனக்கு எதையும் தர அனுமதிக்க மாட்டேன்
அதைவிட துயரம் உனக்கு வேறு எதுவும் இல்லை
நான் வெறுமனே உன்னிடம்
மண்டியிடுகிறேன்
ஒருவனை
வெறுமனே மண்டியிடச் செய்வதற்காக
இந்த உலகம் உன்னை இகழும்
என்றுதானே
மண்டியிடும் ஒருவனைக் கண்டு
இவ்வளவு பயப்படுகிறாய்